Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த மாணவர், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மதியழகன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் மதன்குமார், இவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் உள்ள, புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு அவர் திடீரென்று கல்லூரி விடுதியில் இருந்து காணாமல் போய்விட்டார்.
அடுத்த நாள் அதே பகுதியில், கல்லூரி விடுதி வளாகத்தில், பாதி எரிந்த நிலையில் மாணவர் மதன் குமார் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து தகவல் கிடைத்ததும், வேலகவுண்டம்பட்டியில் இருந்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜார்கண்ட் புறப்பட்டு சென்றுள்ளனர்.
ஜார்கண்ட்டில் கொலை செய்யப்பட மருத்துவ மாணவரின் உடல் விமானம் மூலம் விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. நாமக் கல்லில் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச..உமா வெளியிட்ட தகவல்: நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் மதன்குமார், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் கொலை செய்யப்பட்டு இறந்த தகவல் கிடைத்ததும், நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமார் ஆகியோர் மூலம், ஜார்க்கண்ட் மாநில போலீஸ் டிஐஜி மற்றும் ராஞ்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோரை தொடர்பு கொண்டு, மாணவர் உடலை, விமானம் மூலம் சென்னை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு, நாமக்கல்லில் இருந்து மார்ச்சுவரி வேன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அவரது உடல் கொண்டு வரப்பட்டு, நவ 4 ஆம் தேதி காலை, நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.